Monday, October 17, 2011

"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல': மாணவர் மன்றம் அசத்தல் பிரச்சாரம்

   
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2011,
 
"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல': மாணவர் மன்றம் அசத்தல் பிரச்சாரம்
சேலம்:சேலத்தில் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்தை வீடுகளில் ஒட்டி, விவேகானந்தர் மாணவர் மன்றத்தினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் பண பலம் மிக்க கட்சிகள் ஓட்டுக்கு காசை வாரி இறைத்தன. உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம், சேலை, சில்வர் குடம் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கும் நிலை உள்ளது.
தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை மீறி, பணம் கொடுத்து, ஓட்டுக்களை விலை பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் இந்த செயல்பாட்டை கண்டிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சேலம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நூதன பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.


அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டியில் கிருஷ்ணா நகர் குடியிருப்பில் உள்ள வீடுகளில், விவேகானந்தா மாணவர் மன்றம் சார்பில், "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸை கதவுகளில் ஒட்டி வைத்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஓட்டப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தலைவர் ஆசைக்கண்ணன், செயலளர் யோகா மற்றும் உறுப்பினர்கள், தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைக்கு சுயேட்சை வேட்பாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதுகுறித்து விவேகானந்தா மாணவர் மன்ற செயலாளர் யோகா கூறியதாவது:உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தலின் போது சில வேட்பாளர்கள் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து, வாக்காளர்களை விலை பேசுகின்றனர். தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஒவ்வொருவரும் ஒட்டளிக்க வேண்டும். அதை வலியுறுத்தியும், பிடித்த நல்ல வேட்பாளரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

my blog recent