Thursday, December 1, 2011

போதிதர்மர் தமிழரா?….தொடரும் ஆராய்ச்சி்

7 ஆம் அறிவு படப்பெட்டிகள் ரெட் ஜெயண்ட் ஆபிசுக்கே கூட திரும்பிவிட்டது. ஆனால் போதிதர்மர் தமிழரா என்ற ஆராய்ச்சி மட்டும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த படத்தை சீனாவிலும் திரையிடுவோம் என்று ரிலீசுக்கு முன்பு கூறிவந்த முருகதாஸ், இது குறித்து எவ்வித பத்திரிகை செய்தியையும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஏன் அங்கு இப்படத்தை வெளியிடவில்லை என்பதற்கும் அழுத்தமான காரணம் இருக்கிறது. முதலில் இப்படத்தில் டாங்லீக்கு பதிலாக ஜெட்லீயைதான் நடிக்க வைப்பதாக இருந்தாராம் முருகதாஸ். முழு கதையையும் கேட்ட ஜெட்லீ, இந்த கதை சீனர்களுக்கு எதிரானது. நான் இதில் நடிக்க இயலாது என்று ஒதுங்கிக் கொண்டாராம். (அப்புறம் எப்படி சீனாவில் திரையிடுவார்களாம்?)
உண்மை நிலைமை இப்படியிருக்க, இந்த ஆராய்ச்சியின் பலனாக ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திவாகர் என்ற சரித்திர ஆராய்ச்சியாளர் எழுதியிருப்பதை அப்படியே உங்களுக்கு படிக்க தருகிறோம்.
“போதி தர்மர் குறித்து இந்தியாவில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. ஆனால் சில விஷயங்களை நாம் இணைத்துப் பார்க்கும்போது சில மறைமுக விஷயங்கள் புலப்படலாம்.
போதி தர்மரின் ஆண்டு கி.பி நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு என வைத்துப் பார்க்கும்போது, நாம் காஞ்சிபுரத்தின் இருப்பை சற்றுப் பார்க்கவேண்டும். தொண்டை மண்டலத்தில்தான் காஞ்சி இருந்தாலும் தமிழ் அங்கே சிறப்புறவில்லை என்பதும், வடமொழிப் புலமைதான் சிறந்தோங்கியது என்பதும் தெள்ளிடை மலை. நகரேஷு காஞ்சி – நகரங்களில் சிறந்தது காஞ்சி என பெயர் வரக் காரணமும் காஞ்சிக் கடிகையே.
ஆனால் இரண்டாம் நூற்றாண்டு காஞ்சியின் வீதிகளையும், அப்போதைய செல்வத்தையும் வர்ணித்த கண்ணனார், இளந்திரையன் ஆட்சி செய்த காஞ்சி அப்போதைய மிகப் பெரிய கல்வி நகராக பெயர் பெற்றிருந்ததாகவும், காஞ்சியில் பல்வேறுபட்ட இனத்தார்களும், மதங்களும் இருந்ததாக மிகப் பெரிய குறிப்பு ஒன்றினை ‘பெரும்பாணாற்றுப் படை’ மூலமாக நமக்குத் தருகிறார்.
இளந்திரையன் ஆட்சிக்குப் பிறகு காஞ்சியில் பல்லவர் காலம் வந்தது. முற்காலப் பல்லவர்களும் காஞ்சியை ஒரு மிகப் பெரிய கல்வித்தலமாக வைத்திருந்தனர். பல்வேறுபட்ட மன்னர்கள் இந்தக் கடிகையில் கல்வி கற்றதாகவும், அப்படிக் கற்றுக் கொள்ளும்போது மதங்களின், வர்ணங்களின் பேதங்கள் வாதாடப்படுவதும் முக்கியமான கல்வி நிலை என்றும் தெரிய வருகிறது. தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசன் தனகேதுவாக வந்த ஒரு சந்தர்ப்பத்தினால் கர்நாடகத்தில் தென்பகுதியை அரசள்கிறான். அவன் பெயர் கடம்ப சர்மா. ஆனால் சர்மாக்கள் – பிராம்மணர்கள் அரசாளும் உரிமை இல்லாதவர் என்பதற்காக, காஞ்சிக் கடிகையில் மிகப் பெரிய வாதம் நடைபெற்றது. காஞ்சியில் உள்ள பிராம்மண பண்டிட்டுகளும், மற்ற சத்திரியர்களும் கடம்ப சர்மாவின் ஆளுமையை ஒத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு காஞ்சிக் கடிகையில் உரிமை மறுக்கப்படுகிறது. அவன் காஞ்சியில் வந்திறங்கியவுடன், தான் குலத்தால் ஒரு படி இறங்க ஒப்புக் கொள்வதாகவும், இனித் தன் பெயர் கடம்ப சர்மா இல்லை, கடம்ப வர்மா எனவும் ய்க்ஞ வேள்வியின் முன்பு தாரை வார்த்து மாறுகிறான். – இதைப் பற்றிய குறிப்புகள் கடம்பர் வரலாறிலும் தெலுங்கு சரித்திரப் புலமையாளர் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன.
காஞ்சியில் போதி தர்மர் இருந்தாரா என்றதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் க்டம்ப சர்மா, கடம்ப வர்மா ஆனதைப் போல, மேற்கண்ட நிகழ்ச்சிகள் எத்தனையோ காஞ்சி நகரில் நடந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிகழு போதி தர்மர் பற்றியதாக இருக்கலாம்.
போதி தர்மர் தமிழரா என்றால் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. (விவரம் கிடைக்கவில்லை). களப்பிரரா என்றால் இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது (பிறகு களப்பிரார் யார் எனக் கேள்வி வரும்). களப்பிரர் ஒரு முக்கியப் பிரிவினர் புத்த தர்மத்தை மிக அதிகமான அளவில் பரப்பி இருந்ததாகவும், அச்சுத களப்ப ராயன் என்போன் காலத்தில் அவன் தமிழகத்தை ஆண்டபோது புத்த மதச் செழிப்பைப் பற்றி பாலி மொழியில் ஒரு காவியம் படைக்கப்பட்டுள்ளது, இந்தக் காவியத்தில் உறையூர் நகரச் சிறப்பைப் பற்றிக் கூட பாடல்கள் உண்டு. இப்படிப் பட்ட சமயத்தில் ஏதேனும் இளவரசர், அல்லது அரச குரு போன்றோர் கீழை நாடுகளுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உண்டு.
இவ்வாறு கூறியிருக்கிறார் திவாகர். ஆனால் பேராசிரியர் காம்பே என்பவர் சீன ஆவணங்கள் மூலம் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதையும் பின்வரும் இணைப்பை சொடுக்கி படித்துவிட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்களேன்.

No comments:

Post a Comment

my blog recent