Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு – கருத்துக்கள் நிறைய இருந்தாலும்



ஏழாம் அறிவு – கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை!



படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்… ஏழாம் அறிவு படத்தில்… பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல… வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!
படத்திற்கு வருவோம்… தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.
பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்… ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்… இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.
போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.
சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.

பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.
அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்… அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!
ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?
மறபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் அள்ள்ஹள்ள்ண்ய்’ள் இழ்ங்ங்க் என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது…)
சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்… இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு… சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.
சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.
போதிதர்மரின் திறமைகள் திருப்பவர… விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!
படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்… பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.
முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.
ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.
முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் – எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை… வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.
வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.
ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா… பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்…, யம்மா யம்மா…, அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை. இந்தக் கூட்டணியில் இன்னொரு கஜினியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே!
எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் கீழே தான்!

சந்தானம் கொண்டாடிய மழலைஒளி தீபாவளி…!

October 25, 2011

தமிழ் சினிமாவின் முன்னணி கா‌மெடி நடிகரான சந்தானம், மாற்று திறனாளிகளுடன் பட்டாசு வெடித்து, தனது தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். இன்னர்வீல் 323 அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஆதரவற்ற, ஏழை எளிய சிறுவர், சிறுமிகள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு புது ஆடை மற்றும் இனிப்புகள் வழங்கி நடிகர், நடிகைகள் பங்கேற்க மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும், சென்னை மந்தைவெளியில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலைக் கல்லூரியில் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்து கொண்டு, மாற்றுதிறனாளிகள் 600 பேருக்கும் இன்னர் வீல் அமைப்பு உதவிய தீபாவளி பரிசுகளான புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவைகளை வழங்கியதோடு, அந்த மாற்று திறனாளி சிறுவர் சிறுமிகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார். பிறகு அந்த குழந்தைகளோடு நகைச்சுவையாக பேசி மகிழ்வித்தார். மாலை 4மணிக்கு தொடங்கிய இந்த விழா, இரவு 9மணி வரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதிரடி விழாவாக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர் கிங்காங் மற்றும் நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நாட்டியம் விழா நடந்தது. அவர்களுடன் இணைந்து மாற்று திறனாளிகளும் ஆடி, பாடி மகிழ்ந்தனர். கூடவே மிமிக்கிரி செந்தில் வழங்கிய மிமிக்கிரி சிறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அபிராமி மெகாமால் இயக்குநரும், இன்னர் வீல் அமைப்பின் முன்னாள் சேர்மனும், தற்போதைய கன்வீனருமான திருமதி.நல்லம்மை ராமநாதன், இன்னர்வீல் அமைப்பின் சேர்மன் திருமதி.லதா மகாலிங்கம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்
Bottom

No comments:

Post a Comment

my blog recent