Friday, September 30, 2011

முரண் vimarsanam

விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வரும் சேரன் (நந்தா), திரைத்துறையில் நுழைய முயற்சித்து வருகிறார். படத்தயாரிப்பாளர் ஒருவர் பெங்களூரில் இருப்பது கண்டு, வாய்ப்பு கேட்பதற்காக அங்கே உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து அவரை சந்தித்து பேசுகிறார் சேரன்.
அங்கே பொழுதைப் போக்க வரும் பெரிய பிஸினெஸ் மேனின் மகனாக வரும் பிரச்சன்னா (அர்ஜுன்)வின் அறிமுகம் சேரனுக்கு ஏற்படுகிறது.

விமானத்தில் சென்னை திரும்ப முயலும் சேரன், விமானத்தை தவற விடுகிறார். இதனால் வாடகைக் காரில் பெங்களூரிலிருந்து சென்னை வருகிறார். வரும் வழியில் கார் நின்று போகவே, அவ்வழியே வரும் பிரசன்னாவின் காரில் லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார். பரஸ்பரம் பேசிக் கொள்கையில் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்கின்றனர். சேரனின் மனைவியாக வரும் நிகிதா (இந்து) வேலைக்கு சென்று அதிகம் சம்பாதிக்கும் மனைவியாக வருகிறார். சேரன் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பதால், அவருக்கு வருமானம் இல்லாமல் போகிறது. இதனால் சேரனை மதிக்காமல், தான் தோன்றித்தனமாக இருக்கிறார் நிகிதா.
இதனிடையே சேரனின் திறமை அறிந்து அவரை ஒரு தலையாய் காதலிக்கிறார் ஹரிப்பிரியா (லாவண்யா). இவர் சினிமா துறையில் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். சேரனுக்கு சினிமா வாய்ப்பு தர உதவி செய்ய முற்படுகிறார். நிகிதா, சேரன் ஆகியோருக்கிடையே ஒத்துப் போகாததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் நிகிதா வேறு ஆண்களுக்கு ‘அதிக’ இடம் கொடுக்கிறார். இதை தட்டிக் கேட்கும் சேரனை அவமானப்படுத்துகிறார். எனக்கு தகுதியில்லாத உன்னை கல்யாணம் செய்ததால், என் வாழ்க்கை வீணா போன மாதிரி உன்னோடயே இருந்து உன் வாழ்க்கையை வீணாக்குவேன் என்கிறார்.
இப்போது பிரசன்னாவின் கதை – பெரிய பிஸினெஸ் மேனாக வரும் ஜெயப்பிரகாஷ் (தேவராஜன்). தந்தையின் பிஸினெஸை கவனித்துக் கொள்ளாமல் உல்லாசமாக இருக்கும் பிரசன்னாவிற்கு, தந்தையின் பிஏ-வான சுமா பட்டாச்சார்யா (லிண்டா – ஆங்கிலோ இந்தியன்) மீது காதல் வருகிறது. சுமாவின் தாய் விபச்சாரியாய் இருந்து இறந்து விட்டதால் பிரசன்னாவின் காதலுக்கு தடை போடுகிறார். ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகாஷே லிண்டாவை கற்பழித்து விட்டு, இனி நீ எப்படி என் மகனை திருமணம் செய்து கொள்வாய் என்று விட்டு போகிறார்.
உண்மையை அறியும் பிரசன்னாவிடம் ‘நீ உல்லாசமாய் இருப்பதை விடுத்து, சிறந்த பிஸினெஸ் மேன் என்பதை நிரூபிக்கணும். உன் தந்தையின் எண்ணத்தை மாற்ற வேண்டும். என்று சத்தியம் வாங்கி விட்டு தற்கொலை செய்து கொள்கிறார் சுமா. சேரனும் பிரசன்னாவும் நட்பாகின்றனர். ஏதேனும் பிரச்சினை என்றால் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்கின்றனர். சென்னை வந்து சிலகாலம் ஆகிறது. நிகிதாவின் நடத்தை சேரனுக்கு வருத்தத்தை தருகிறது. பிறகு ஏற்படும் ஒரு ஆக்சிடெண்டில் நிகிதா இறந்து போகிறார்.
சேரனிடம் ‘நடந்தது ஆக்சிடெண்ட் அல்ல, உன் மனைவி நடத்தை சரியில்லை என்பதால் நான்தான் ஆக்சிடெண்டில் மாட்ட வைத்து கொன்றேன்’ என்கிறார் பிரசன்னா.
கோபமுறும் சேரனிடம், நிகிதாவின் மோசமான நடத்தை பற்றிய ஆதாரங்களை காட்டி, இதனால்தான் கொன்றேன் என்கிறார் பிரசன்னா. சேரனிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, உனக்கு தொல்லையாயிருந்த உன் மனைவியை நான் கொன்றேன். எனக்கு தொல்லை தரும் என் தந்தையை நீ கொன்று விடு என்கிறார் பிரசன்னா.
இங்கே வருகிறது இடைவேளை…
சேரன், பிரசன்னா சொன்ன வேலையை செயதாரா? ஹரிப்பிரியாவின் காதல் என்னாயிற்று? பிரசன்னாவின் குறிக்கோள் வென்றதா? என்பதை சில திடுக்கிடும் திருப்பங்களை தந்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். தனக்குரிய பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சேரன். மனைவி மோசமானவள் என்றாலும் ‘என் மனைவியை ஏண்டா கொன்ன’ என்று பிரசன்னாவின் சட்டையை பிடித்து உலுக்கும் போது, அசத்துகிறார் சேரன். சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பரிதாபம் கொள்ள வைக்கிறார்.
பணக்கார வீட்டுப் பையனாக பிரசன்னா. சேரனுக்கு இணையான வேடம். சேரன் அமைதி என்றால், இவர் அதிரடியாய் இருக்கிறார். சேரனிடம் சென்று ‘உங்க மனைவி ஆக்ஸிடெண்ட்ல சாகல, நான் ஆக்சிடெண்ட் ஏற்படுத்தினதால செத்தாங்க’ என்று சொல்லும் போதும், நல்லவராக இருக்கும் தனது அப்பா மீது வீண்பழி சுமத்தும் போதும் இவர்தான் வில்லனாக இருப்பாரோ என்று தோன்ற வைக்கிறார். சேரனுக்கு அடங்காத மனைவியாக வரும் நிகிதா… நடிப்பில் அசத்துகிறார். சில காட்சிகளில் வந்து தொல்லை தந்துவிட்டு, அநியாயமாய் செத்துப் போய்விடுகிறார். காஸ்ட்யூம் டிசைனராக வரும ஹரிப்பிரியா மனதில் நிற்கிறார். அனாதை சிறுவர்களுக்காக வீடு வீடாக சென்று சோப்பு விற்கும் போதும், சேரனுக்கு உதவ முன் வரும்போதும் அழகாய் நடித்திருக்கிறார்.
சஜன் மாதவ்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஒலிப்பதிவு எடிட்டிங் படு மோசமாக இருக்கிறது. ஜெயப்பிரகாஷ் சுமாவை கற்பழிக்கும் காட்சியை, ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். முதல் பாதியில் படம் மிகவும் தொய்வாக நகர்கிறது. பின்பாதியில் திடுக்கிடும் திருப்பங்களால் வேகம் கொள்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடயே முரண் பட்டால் வாழ்க்கை என்னாகும், காதலால் தந்தையும் மகனும் முரண்பட்டால் என்ன ஆகும் என்பதை கதைக்கருவாக எடுத்து கொண்டு படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குனர், சில காட்சியமைப்புகளுக்கு அழுத்தமான காரணங்களை சொல்லாமல் இருப்பது படத்தில் மிகப் பெரிய குறையாக உள்ளது.
சேரன், பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் அளவிற்கு கதாநாயகிகள் யாரும் நடித்திருக்கவில்லை என்பது ஒரு சில காட்சிகளில் அப்படமாகத் தெரிகிறது. இயக்குனர் அவர்களை இன்னும் வேலை வாங்கியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது.
முரண்பட்ட வாழ்க்கையில் முரண்களை தவிர்த்து விட்டு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறது இந்த முரண்.

No comments:

Post a Comment

my blog recent